Saturday, March 09, 2019

முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை - தமிழக RSS சீமான்

இந்துக்களுக்கு மொத்த இந்தியாவில் லட்சத்திற்கும் மேல் சிறுதெய்வங்கள் உண்டு. அவர்களுக்கு விஷ்ணு, சிவா, தேவி போன்றவர்களே பெருங்கடவுள்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகமாக வணங்குவது Lord Ram, Bajrang Bhalli மற்றும் Lord Krishna.
இந்துத்துவம் பெருந்தெய்வங்களான விஷ்ணுவையோ, சிவாவையோ, தேவியையோ முதன்மைபடுத்தாமல் ராமரை முதன்மைபடுத்தி அரசியல் பொருளாக மாற்றியதற்கான முதல் காரணமே முதல் பத்தியில் இருக்கும் விடயம் தான்.
வடயிந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவரையும் அந்த ஒரு கடவுளை வைத்து தான் மொத்த மக்கள்தொகையில் அதிகமான இந்துக்களை Cover செய்யமுடியும் என்பதால் தான் ராமரை அரசியலாக்கினார்கள். இந்துத்துவா வகையறாக்களுக்கும் பக்திக்கும் துளியும் தொடர்பில்லை. அதற்கு சாட்சியே, அவர்களின் தத்துவார்த்தவாதி சாவர்க்கர் ஒரு நாத்திகர் என்பது தான். இவர்களுக்கு தேவை, அதன் மூலம் கிடைக்கும் அரசியலும், அதிகாரமும் தான்.
அந்த திட்டம் தான் ஒரளவு வெற்றிப் பெற்று இன்று பெரும்பான்மையாக ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள் பக்தியாளர்கள் அல்ல, ஆனால் இவர்களின் அரசியலுக்கு முட்டாள்களாக இருக்கும் கடவுள் பக்தர்கள் அதிகம் தேவைப்படுவார்கள்.
அதே போல், தமிழ்நாட்டில் இருக்கும் பெருந்தெய்வங்களில் அதிகமான மக்கள் வணங்குவது சிவன், முருகன், கிருஷ்ணன், ஐயப்பன், பெருமாள் மட்டுமே. எப்படி இந்திய-இந்து பண்பாட்டு மீட்சி என்ற குரலை உயர்த்தி இந்துத்துவ சக்திகள் ஆரம்பத்தில் உலாவியதோ, அதே பாணியில் தமிழ் பண்பாட்டு மீட்சி என்று சில கோமாளிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் Comics எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஆதிபாட்டன் சிவன், முப்பாட்டன் முருகன், முப்பாட்டன் கிருஷ்ணன் என்று கூறுவதற்கான காரணமே பெரும்பான்மை மக்களை கவர்வதற்கு தான். அந்த பண்பாட்டு மீட்சியாளர்கள் கூறும் கூற்றுக்கு மாறாக அவர்களே எப்படி நடக்கிறார்கள் என நீங்களே பாருங்கள்.
தமிழ் இலக்கியங்களின் வாயிலாக பண்டைய தமிழ் மக்கள் ஐந்தினை நிலங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு திணை தெய்வ வழிபாடு இருந்தது. குறிஞ்சிக்கு(மலை பகுதி) - சேயோன், முல்லைக்கு(காடு பகுதி) - மாயோன், நெய்தலுக்கு (கடல் பகுதி)- வருணன் , மருதத்துக்கு(வயல் பகுதி)- இந்திரன், பாலைக்கு(வறண்ட நில பகுதி) - கொற்றவை என்று வணங்கி வந்துள்ளார்கள்.
இந்த பெயர்களை அப்படியே பயன்படுத்தி பேசினால் ஒரு நபரும் கேட்கமாட்டார்கள் என்பதனால் தான், தற்போது இருக்கும் பெருந்தெய்வங்களை ஒப்பிட்டு, திணை தெய்வ பெயர்களை மறைத்து பெரும்பான்மை தெய்வ பெயர்களை வைத்து அழைக்கிறார். முப்பாட்டன் சேயோன் என்று அழைப்பது தானே முறை, ஏன் முப்பாட்டன் முருகன் என அழைக்கவேண்டும்?
முருகன் தான் சேயோனாகவே இருந்தாலும்(நிறுபிக்கப்படவில்லை), பண்பாட்டை மீட்பவர்கள் சேயோனை முப்பாட்டனாக தானே மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்க வேண்டும். முருகனை மட்டும் மேடை தோறும் பேசியதிலிருந்தே அது இந்தத்துவாவின் ஒத்த அதே அரசியல் நகர்வு என்பது நமக்கு புலப்படுகிறது. கிருஷ்ணனை மாயோன் என எல்லா இடத்திலும் பயன்படுத்தமாட்டார். அடிக்கடி கிருஷ்ண பரமார்த்மாவை மேற்கோள் காட்டுவார்.
ஆனால், தப்பி தவறி கூட இந்திரனையோ மற்ற திணை தெய்வங்களையோ அதிகமாக பேசமாட்டார். அதில் வாக்குகளோ , மக்கள் கவர்ச்சியோ இல்லை. முருகன், செட்டியார்கள் வணிக கடவுளாக வணங்கக்கூடிய தெய்வம். அதிகமாக முருகனை வழிபட்டு, பழனி பாதயாத்திரை செல்பவர்கள் முக்குலத்தோர்கள். கிருஷ்ணனை வணங்குபவர்களில் கோனார்களும், வைணவ வன்னியர்களும் அடக்கம்.
ஆனால் இந்திரனோ, கொற்றவையோ ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட, அனைவராலும் வணங்கக்குடிய பெருந்தெய்வமாக இல்லை. இந்திரன் என்பது கணிசமான அளவு தேவேந்திரர்கள் வணங்குவார்கள் ஆனால் இந்திரனுக்கோ அதிகமான கோவில்களோ தளங்களோ இல்லை. கொற்றவை என்பது வேட்டுவ கவுண்டர்கள் வணங்கும் ஒரு குலதெய்வமாகவே உள்ளது. இதையெல்லாம் மறந்தும் முதன்மை படுத்தமாட்டார்கள். ஐந்தினைகளில் இல்லாத ஆதிபாட்டன் சிவனும், சேயோன் என்று சொல்லாமல் முப்பாட்டன் முருகன் என வருவதும், மாயோன் என சொல்லாமல் கிருஷ்ணன் என்பதே இவர்கள் வாயில் அதிகமாக உதிரும் வார்த்தைகளாகவே இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் கட்டமைக்கும் அந்த அரசியல் அப்படியானது.
அவர்கள் பக்தியை முதலீடாக கொண்டு அரசியல் என்றால், இவர்கள் பண்பாடு, தமிழ், தமிழர் என்ற வார்த்தையை கொண்டு பெரும்பான்மை அரசியல். இவர்கள் அனைத்து விடயத்திலும் உணர்வு, உணர்ச்சி, புனிதம் என்று எல்லாவற்றையும் பூசி மொளுகி ஒரு மாயையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறார்கள்.
இருவருக்கும் ராமனோ, முருகனோ முக்கியமில்லை, அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் லாபமும் தான் முக்கியம். பழனி மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் பள்ளிவாசலிலும் தேவாலயங்களிலும் தங்கி தண்ணீர் குடித்து விட்டு செல்வார்கள். அவர்கள் மனதில் இப்படிப்பட்ட வாதங்கள் நஞ்சை தான் விதைக்கும். நஞ்சு வேர்கள் கால்களை சுற்றும்போதே சுதாரித்து பிடிங்கி எறிவது நமக்கும் சமூகத்திற்கும் நலம். இவர்கள் பேசுவதற்கு பெயர் தமிழ்தேசியம் என்றால் பெரியாரும், தமிழரசனும், பிரபாகரனும் பேசியதற்கு வேறு பெயர் தான் வைத்தாக வேண்டும்.
பதிவுடைய கரு என்பது " முருக பக்தர்களும் கிருஷ்ண பக்தர்களும் ஜாக்கிரதை"
-விக்டர் இறைதாசன்

No comments: