Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (69)

அரசியலில் நுழைவதையும், அந்த நுழைவிற்குத் தேவைப்படும் வாக்காளர்களின் வாக்குகளையும் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கு வேண்டிய மத, சாதி உணர்வுகளையும் அலட்சியப்படுத்தக்கூடிய ஒரே தலைவராகப் பெரியார் விளங்கினார்.


தமிழகத்தின் சட்டமன்ற அரசியலைத் தீர்மானிக்கும் எண்ணிக்கைப் பலம் வாய்ந்த ஒரு சமூகத்தினரின் தலைவரின் ஆதிக்க சாதி மனப்பான்மையைத் துணிச்சலுடன் கண்டிக்கவும், தாழ்த்தப்பட்டோருக்கு உறுதுணையாக, தார்மீக ஆதரவு கொடுக்கக் கூடியவராகவும் அவரால் இருக்க முடிந்தது.


1957 ஆம் ஆண்டு, முதுகுளத்தூர் பகுதியில் நடந்த சாதிக்கலவரங்கள் தொடர்பாகப் பெரியார் மேற்கொண்ட நிலைப்பாடு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

முத்துராமலிங்கத் தேவர் மீது பெரியாருக்குத் தனிப்பட்ட பகை ஏதும் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் 1937-39 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது அவர் கைது செய்யப்பட்டதைக் ‘குடி அரசு’ கண்டனம் செய்திருக்கிறது.

 முதுகுளத்தூர் கலவரத்தின் போது, காமராசர் அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் கலவரம் பரவாமல் தடுத்தன. தேவர் கைது செய்யப்பட்டார். அரசியல் கட்சிகள் அனைத்தும் தேவர் கைதைக் கண்டனம் செய்த நிலையில், சட்டமன்ற அரசியலில் பங்கேற்காத பெரியார் மட்டுமே தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகப் பேசிய ஒரே தலைவராகத் திகழ்ந்தார்.

“முன்கூட்டியே முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தனை ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி இருக்குமா?

(விடுதலை தலையங்கம் 04.10.1957)

No comments: