Saturday, March 09, 2019

நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்

நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் மறைவுற்று ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது (28.2.2018). தன்னடக்கம், மனித நேயம் என்ற சிறப்பான குணங்களை தன்னகத்தே கொண்டு அனைவரிடத்திலும் அன்பு செலுத்திய பெருமகன்.
இன்றைக்கு இந்தியா முழுமையும், பெரும்பான்மை மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 இட ஒதுக்கீடு பெறுவதற்கு, உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்த தீர்ப்புதான் வழிவகுத்தது என்பது மிகையல்ல.
அரசமைப்புச் சட்டத்தின் 340-விதியின்படி அமைக்கப்பட்ட மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரையில் ஒன்றான, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு எனும் ஆணையை, அன்றைய பிரதமர், சமுக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் 7.8.1990 அன்று பிறப்பித்தார்.
அந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று பல சான்றுகளுடன் அளித்த தீர்ப்புதான், பெரும்பான்மை தீர்ப்பாக மாறுவதற்கும், அதன் காரணமாக, உரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், மத்திய அரசின் பணிகளில் இட ஒதுக்கீடு பெறவும் முடிந்தது.
244 பாராக்கள் கொண்ட, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அளித்த தீர்ப்பு (16.11.1992), திராவிடர் இயக்கத்தின் சமுக நீதிக் கோட்பாட்டின் மீது அவர் கொண்ட நம்பிக்கையையும், உணர்வையும், ஆழத்தையும், வெளிப்படுத்தியது.
இந்த இட ஒதுக்கீடு ஆணை, பாரத் ரத்னா பி.ஆர்.அம்பேத்கர், தந்தை பெரியார், ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கும் செயல் என வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் கூறிய வார்த்தைகளை, தனது தீர்ப்பில் கூறி, தான் யார் என்பதையும் வெளிக்காட்டினார்.
அடுத்து Second Judges Case வழக்கிலும் (6.10.1993), மகளிர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம், நீதித்துறையில் வேண்டும் என்ற தீர்ப்பை அளித்தார்.
தற்போது, சமுக நீதிக்கெதிரான நிலைப்பாடுகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், அதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் வாதாடும்போது, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள், இட ஒதுக்கீடு குறித்து அளித்த தீர்ப்பு, நமக்கு ஆதாரமாகவும், வழிகாட்டுதலாகவும் உள்ளது.
இருப்பினும், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் போன்று, இன்றைய நீதிமான்கள், அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்படி தீர்ப்பளித்து சமுக நீதியைக் காப்பாற்றுவார்களா? என்ற ஏக்கமும் கூடவே இணைகிறது.
அவரின் சமுக நீதிச் சிந்தனைகளை மனதில் ஏந்தி, வெற்றி பெறுவதே, அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த நினைவேந்தலாகும்.
நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்.


No comments: