Saturday, March 09, 2019

#திராவிடம் அறிவோம் (70)

திராவிடம் என்ற சொல்  பல நூறாண்டுகளாய்ப் பயன்பாட்டில் உள்ளது.

கி.மு.முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43,44 ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

”ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்….திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள்” என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி.17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, “கல்லாத பேர்களே நல்லவர்கள்” என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் ‘திராவிட சிசு’ என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப்பயன்பட்டது.

1856 இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின்னரே திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

--

ஆரியர்கள் இங்கு நுழையும் முன்னர் இங்கு வாழ்ந்த நாகர் இன மக்கள் "திராவிடர் "
என்கிறார் டாக்டர் அம்பேத்கர். இது கி.மு. 1500 க்கு முன்னர்.

தமிழ் எழுத்தின் முதல் வடிவம் " திராவிடி" என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன். இதை "லேனா " அல்லது "குகை எழுத்து " என்றும் அவர் கூறுகிறார். திராவிடத்தின் தொன்மைக்கு இவையும் சான்றாக நிற்கிறது.

--

திராவிடர்கள், நாகர்கள் என்பது ஒரே மக்களின் வெவ்வேறு பெயர்களே என்பதை ஒப்புக்கொள்ள வெகுசிலரே தயாராக இருப்பர் என்பதை மறுக்கமுடியாது; அதேபோன்று திராவிடர்கள் நாகர்களாக தென்னிந்தியாவில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் பரவியிருந்தனர் என்பதையும் சிலரே ஒப்புக்கொள்வர். ஆயினும் இவை வரலாற்று உண்மைகள் என்பதில் ஐயமில்லை.

- அண்ணல் அம்பேத்கர்

(நூல்: அம்பேத்கர் - இன்றும் என்றும்)

No comments: